மஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி

ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.

மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.

ஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு சான்றுகள் இல்லை, இது தொடர்பில் எந்தவித வழக்குகளும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் 'கொட்டி சந்தியா" (புலி சந்தியா) என்ற பெயர் எனக்கு வந்திருப்பது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.

எனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா?

மஹிந்த மற்றும் அவர்கள் சார்பானவர்களின் மோசடிகள் பற்றி விசாரிக்க முன்பாகவே மஹிந்தவுக்கு அந்த செய்திகள் காதில் எட்டிவிடுகின்றது.ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் அமைச்சர் ராஜித சேனாரட்னா கூறியுள்ளார்.

அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர்.

அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.

ஆனால் அவர் அவ்வாறு செயற்பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.

மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்

மைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக‌
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்

அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்

இலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.

அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டார்.இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்

போர்க்குற்றத்துக்கு எதிரான அனைத்துலக விசாரணையினை தாம் ஏற்கப்போவதில்லை என மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். அதற்கு பல நாடுகளையும் ஆதாரமாக காட்டியுள்ளார்

குறிப்பாக, ஈராக்கில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய படையினருக்கு ஆதரவான நிலை ப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கொண்டுள்ளதைப் போன்று, தாமும் இலங்கை படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஈராக்கிய மக்கள் சார்பு வழக்கறிஞர் குழுவொன்றால் பிரிட்டனின் படைச்சிப்பாய்கள் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தெரேசா மே தெரிவித்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, இவ்விடயத்தில் ஐ.நா. இலங்கை தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தக் குற்ற விசாரணைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கூறி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…