தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்

ச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.

தற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.

அந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை

தமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

தமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டமை, காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்த போதும், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து வெளியேற மறுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், ''சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்தும் போது மேற்கொண்ட நடவடிக்கைகளையின் போது ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் வழிய ஓடிய காட்சிகள், காவல் துறையினர் பலரின் வீடுகளுள் சென்று மக்களை கடுமையாக தாக்கியது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் கண்ணபிக்கப்பட்டன. இது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை ஏற்பட்டபோது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும்,இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்

தேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.

இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.

மேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. "நானே ராவணன்தான்" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.

அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.

பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி

சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.

பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா? பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,

ஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.

ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.

முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.

குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.

அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை

2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.
அதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…