அரிசி, மாவுடன் மரக்கறியும்,ஆட்களைப்பிடிக்கும் போது இரசீதும் வழங்கவேண்டும் - சிறிகாந்தா

புதன்கிழமை, நவம்பர் 18, 2009
srikantha
தடுப்பு முகாம்களில்  தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட  த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. பசில் மற்றும் மிலிந்த மொரகொட ஆகியோரை சந்தித்த குழுவின் சார்பாக சிறிகாந்தா இவ்வாறு கோரிகையினை விடுத்துள்ளார்.

முகாம்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய நாடாளுமன்ற குழுவில் சிறிகாந்தா நேற்று தனது நேர்முகத்தில் 1000 கணக்கான  மக்கள் இருக்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று கூறமுடியாது என கூறினார். இவர் இதற்கு முன்பு எந்த முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். எதனை வைத்து ஒப்பீடு செய்கின்றார். சுனாமி காலப்பகுதியில் இதனைவிட  அதிகமாக 292 முகாம்களில் நான்கு இலட்சம் மக்களை பராமரித்த அனுபவம் தமிழர்களுக்கு உண்டு அந்த வேளையில் இவர் சென்று பார்வையிட்டாரா? அல்லது ஜயசிக்குறு போன்ற போர்காலங்களில் உள்ள முகாம்களை பார்வையிட்டாரா? இந்த காலப்பகுதியில் முகாம் பராமரிப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபை தமிழர் புனர்வாழ்வு கழகத்தை பாராட்டியுள்ளது. அதே நேரம் சிங்கள பகுதியில் உள்ள முகாம்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் விமர்சனங்கள் வந்துள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களை பராமரிக்க முடியவில்லை என்று கூறுவதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் இயலாத்தன்மையினை பூசி  மெழுகி ஏன் பேசவேண்டும்.

இது இவ்வாறு இருக்க முகாம்களில் எவ்வளவோ பிரச்சினை இருக்கின்றது. அவற்றை ஏன் கூறவில்லை

குறிப்பாக மிகுதி மக்களையும் விரைவில் விடுதலை செய்யவேண்டும் எனவும் அதற்கான கால அட்டவணையினையும் ஏன் கேட்டிருக்க முடியாது? அதாவது  தேர்தலுக்கு முன்பாக அனைவரையும் விடுவித்து மீழ் குடியமர செய்யவேண்டும் அல்லது அவரவர் தமது சொந்த இடங்களிற்கோ, உறவினர் வீடுகளிற்கோ அல்லது தாம் விரும்பிய இடங்களிற்கோ செல்லுமாறு  உத்தரவிட ஏன் அரசாங்கத்தை சிறிகாந்தா கோரவில்லை?

கைது செய்யப்படுவோர்களை உடனடியாக நீதி மன்றத்தில் பதிவு செய்து சட்ட ரீதியாக முன்னிறுத்த ஏன் கோரவில்லை? அல்லது முகாமில் கைது செய்யப்படுவோரை நீதி மன்ற அனுமதியுடன் கைது செய்யும் முறைமையினை ஏன் நீதி அமைச்சரிடம் கேட்டிருக்க முடியாது?இதுவரை கைது செய்யப்பட்டுள்ளோரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க ஏன் கோரவில்லை? இதுவரை  நடந்த அரசாங்கத்துடனான சந்திப்புக்களில் போராளிகள் மற்றும் சந்தேக நபர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிடவோ அன்றி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றியோ  பேசப்படவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரினதும் தியாகங்களினால் நீங்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றதனை  ஏன் மறந்தீர்கள்?

மீழ் குடியேற்றப்படும் மக்களுக்கு விசேட ஆட்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது இவாறு இருக்க  திரும்ப திரும்ப மீழ் குடியேற்றப்பட்ட மக்களிடம் பதிவுகளை மேற்கொள்வதும், தேடுதல்களும், கைதுகளும் இடம்பெறுகின்றன. இது ஏன் என திரு சிறிகாந்தா  கேட்கவில்லை. அதனை நிறுத்துமாறும் கோரவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் ஓர் தன்னார்வ அமைப்பினை நிறுவி அதனூடாக சர்வதேச உதவிகளை எடுத்து வேலைகளை செய்யுமாறு பலதடவைகள் இவர்களுக்கு கூறப்பட்டது அதனை கூட ஏன் இன்னமும் செய்யவில்லை. தன்னார்வ அமைப்பினை நிறுவுவதற்கும் உள்ளூர் அமைப்புக்கள் பணிபுரிவத்ற்கும் அரசாங்கம் அனுமதிகளை தற்போடு வழங்கி வருகின்றது. ஆகவே இதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அரசாங்கம் விடுகின்றார்கள் இல்லை என கூறிக்கொண்டு அப்படியே இருக்கமுடியுமா? முயற்சிகளை செய்து பார்க்கவேண்டாமா?

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நீண்டக்கலம் உழைக்கும் ஒரு கொழும்பு தமிழரை சந்திக்க நேர்ந்தது அவரை சந்திக்கும் போது அவர் கூறினார் 2005 போல் இல்லாமல் இந்த முறை தமிழர்கள் ரணில் அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் கேட்டேன் இவ்வளவு மக்கள் முகாம்களில் அடைபட்டு இருக்கும் போது நீங்கள் என்ன செய்தீர்கள் ? அவரது பதில்  முகாம்களுக்கு அரசாங்கம் எம்மை அனுமதிக்கவில்லை என்பதுதான் ஆனால் நான் கேட்டேன் சரி இந்த மக்களுக்காக ஒரு நாள் பாராளுமன்றத்தில் வெளி நடப்பு செய்தீர்களா? ஒரு நாள் சத்தியா கிரகம் மேற்கொண்டீர்களா? அவர் சொன்னார் ஓம் அப்படியும் செய்திருக்கலாம் என்று.  இதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் கேட்கலாம் என தோன்றுகின்றது.