அம்பாரையில் 50,000 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
Aamparai flood
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை சுமார் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நிவாரணங்களை அந்தந்தப் பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிவருவதாக அம்பாரை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ எஸ் எம் ஸியாத் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோரப் பிரதேசங்களிலும் சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி போன்ற பகுதி மக்களும் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிடுகிறது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7,000 குடும்பங்களும், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 8,426 குடும்பங்களும், ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,009 குடும்பங்களும், பாதிப்படைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

இது தவிர சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 16,576 குடும்பங்களும்,காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1,630 குடும்பங்களும்  பாதிப்படைந்துள்ளன.

மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது