அன்புடன் தங்கேஸ்வரி அம்மாவுக்கு

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
அன்புடன் தங்கேஸ்வரி அம்மாவுக்கு தாங்கள் இனப்படுகொலை புரிந்த மஹிந்த அரசுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு சில காரணங்களை கூறி இருக்கின்றீர்கள்.அதாவது மஹிந்தவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு காரணம் நொந்துபோய் இருக்கும் மக்களின் துயரை துடைக்கவே என கூறி உள்ளீர்கள். நல்ல விடயம் ஆனால் நாங்கள் கேட்பது என்னவெனில் மக்கள் நொந்து போயுள்ளார்கள் என்பது எப்போது உங்களுக்கு தெரியும்? கூட்டமைப்பில் இடம் கிடைக்காது அல்லது கருணா வந்து கூறிய பின்னர் தானா தெரிய வந்தது.

உண்மையாக நீங்கள் மக்கள் துயர் தாங்க முடியாத ஓர் மனிதாபிமானம் உள்ளவர் என்றால் முள்ளி வாய்க்காலில் மக்கள் கொலை செய்யப்படும் போது அடையாளத்திற்காகவாவது பாராளுமன்றில் அல்லது கொழும்பில்  உண்ணா விரதம் இருந்தீர்களா? அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்ய முன் வந்தீர்களா? ( கூட்டமைப்பு தலைமை கூட இதனை சிந்திக்கவில்லையே உங்களை கேட்பதற்கு மன்னிக்கவேண்டும்).

சரி அதுதான் இல்லை என்றாலும் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வேளை மஹிந்த செருக்குடன் கூடிய ஓர்  கருத்து கூறினார். அதாவது மக்களிற்கு சேவை செய்ய விரும்பின்  கூட்டமைப்பினர் என்னுடன் வந்து சேருங்கள் என்று.  ஆகவே அந்த நேரம் உங்கள் எதிர்காலத்தையும் பாராது, தமிழ் மக்கள் பேசினாலும் திட்டி தீர்த்தாலும் பரவாயில்லை நான் அரசுடன் சேர்ந்து முகாம்களில் அடைபட்டு இருக்கும் மக்களுக்கு எதையாவது செய்ய போகின்றேன் என ஏன் முடிவு எடுக்கவில்லை.

அந்த வேளை தமிழ் மக்கள் நொந்துபோயுள்ளனர் என்று உங்களுக்கு தெரியவில்லையா?

உங்கள் தனிப்பட்ட முடிவுகள், நலன்கள், பாதுகாப்பு, இருப்பு என்பவற்றுக்காக மக்களின் துன்பதுயரங்களையும், அளிவுகளையும் ஏன் பாவிக்கின்றீர்கள். கூட்டமைப்புடன் ஒத்துவரவில்லை அல்லது கூட்டமைப்பு சீற் தரவில்லை என்பது வேறு ஆனால் மக்களின் துன்பதுயரங்களைப்போக்க மஹிந்தவுடன் கூட்டு சேர போகின்றேன் என்பது வேறு. தயவு செய்து மீண்டும் மக்கள் மக்கள் என வார்த்தைகளை உங்கள் நலனிற்காக பயன்படுத்தாதீர்கள்.

எங்களுக்கு தெரியும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலக்கபட்ட வேளை கருணாவினால் பிரதேச வாதம் கிளப்பபட்டது. கூட்டமைப்பும் இரண்டாக பிளவுறும் நிலையில் இருந்தது. இந்த வேளை கொழும்பில் அனைத்து கூட்டமைப்பு எம்.பி க்களையும் கூப்பிட்டு கஜேந்திர குமார் தலைமையில் அவரது வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது.

அதாவது கூட்டமைப்பு இந்தவேளை பிரதேச வாதம் பேசாது ஒற்றுமையினை பேணவேண்டும் என்பதே அந்த கூட்டத்தின் நோக்கம். இந்த வேளை கூட்டமைப்பின் கூட்டம் கஜேந்திரகுமார் வீட்டில் நடைபெறுவதாக கேள்விப்பட்ட கருணா அணி கஜேந்திர குமார் வீட்டினை சுற்றி வளைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  இந்த கூட்டத்தின் போது பிரதேச வாதத்தில் சிக்குண்ட  நீங்களும் என்ன கூறியிருந்தீர்கள்?

அதாவது கருணா சொவதிலும் நியாயம் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் தனித்துவமானது எனவும் இப்போ கூட்டமைப்பின் ஒற்றூமை பற்றி இப்போது முடிவு எடுக்கமுடியாது எனவும் கூறி இருந்தீர்கள் அல்லவா. 

ஆகவே உங்களின் நிலைப்பாடு எப்படி தளம்பலானது என்பது எங்களுக்கு தெரியும். ஆகவே தேவைக்கு ஏற்ப நொந்து போயிருக்கும் மக்களை பாவிப்பதுதான் மீண்டும் மீண்டும் அவர்களின் மனங்களை நோக செய்யும்  என்பதனை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடி செயற்ப்பட உரிமையுண்டு. அதற்காக பொய்யான காரணங்களை கூறகூடாது என்பதே எமது வேண்டுதல்.